Welcome

3/11/11

Tamil world: ninnaye rathi endru..

Tamil world: ninnaye rathi endru..: "http://withfriendship.com/videos/aishu/ninnaye-rathi-bharathiyar-song.php"

3/8/09

விழிகள்

விழிகள் பேசுமாம் காதலர்களுக்கு
எனக்குமில்லை; உனக்குமில்லை
விழிகள்

நீர் விட்டு மீன்கள்
துடித்தே இறக்குமாம்
நீ விட்டு நான் மட்டும்
என்னிதயம் துடிக்குமா?

நான் ஒவ்வொரு முறையும்
தோல்வியுரும் போதெல்லாம்
உன்னையே நினைத்துக் கொள்வேன்
என் வெற்றிக்கு
மிக அருகாமையில் நீ

உனது சிரிப்பலைகள்
எனது இதய வாசலைத் தட்டுகிறது,
திறப்பதா? அல்லது
தீர்ப்பதா?

உன் கோபங்கள்
பல நரம்புகளைத் தூண்டிவிடும்
என் ஆசையைக் கூடவா?

தென்றல் தீண்டிவிடுமாம் காதலர்களூக்கு
நானுமில்லை; நீயுமில்லை;
வெற்றிடம்

இனியாவது உன்
இனிய கொலுசுகளோடு
ஓடு!
உன் காலடியிலாவது கிடக்கிறேன்

முத்தம்

சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.


இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான
இளஞ்சூட்டு முத்தத்தில்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ நாணத்தை
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

: கையிலிட்ட முத்தம் :

ஒரு சர்ப்பம் போல் மெல்ல
விரல் படர்ந்து

செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து

நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்

இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்

உன்
உதட்டு வேர்களில் முளைத்த
முத்தக் கனிகள்.

1/9/08

நீ கோலம் வரைவது

என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

யதார்த்தமானது…

உனக்காக நான் தவமும் இருக்கவில்லை…
எனக்காக நீ வரமும் தந்துவிடவில்லை…

நாம் ஈருடல் ஓருயிரல்ல!
நம் உடலும் இரண்டுதான்!
உயிரும் இரண்டுதான்!
உணர்வுகளும் அதைப் போலவே!

நம் நான்கு கண்களும்
ஒரேக் கனவைக் காணுவதில்லை!
உன் கண்ணில் உன் கனவுகள்..
என் கண்ணில் என் கனவுகள்..

நான்/நீ நினைப்பதை உ/எ ன்னால்
கண்டு பிடிக்கவும் முடியவில்லை!
மௌனத்தின் அர்த்தம் புரிந்து கொள்ள
நாம் ஒன்றும் ஞானிகளுமல்ல!

நம் ரசனைகளும் ஒன்றாகவே இல்லை!
எனக்குப் பிடித்தது எல்லாமே உனக்குப் பிடிக்கவில்லை!
உனக்குப் பிடித்தது எல்லாமே எனக்கும் பிடிக்கவில்லை!

நிறத்தில் மட்டுமல்ல
கருத்திலும் நாம் ஒரே மாதிரியில்லை!

என்னைப் போல நீ இல்லை!
நிஜமாய்,
என்னைப் போல நீ இல்லவே இல்லை!!

ஆனாலும் உன்னை நான் காதலிக்கிறேன்! …காதலிப்பேன்!

என்னை என் குறைகளோடு சேர்த்தே நேசிப்பவள் நீ !
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேனடி….
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேன் நான்!

புனிதமாக
வாழ்த்தி வணங்க
நம் காதல் ஒன்றும்
தெய்வீகமானது அல்ல!

இயல்பாக வாழ்ந்து மகிழ,
அது யதார்த்தமானது…
மிக மிக யதார்த்தமானது!

உன் நகம்

நீ வெட்டும் போதெல்லாம்,
உன்னை விட்டுப் பிரிகிற சோகத்தில்
உன் நகம் அழுகிறதே,
உனக்கது கேட்பதில்லையா?

மகிழ்ச்சியையும், துயரத்தையும்

நம்
மகிழ்ச்சியையும்
துயரத்தையும்
பகிர்ந்து கொள்ளலாம்
என்கிறாய்!
வேண்டாமடி!
என் மகிழ்ச்சியையும்
உன் துயரத்தையும்
பரிமாறிக் கொள்வோம்!