Welcome

1/9/08

நீ கோலம் வரைவது

என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

யதார்த்தமானது…

உனக்காக நான் தவமும் இருக்கவில்லை…
எனக்காக நீ வரமும் தந்துவிடவில்லை…

நாம் ஈருடல் ஓருயிரல்ல!
நம் உடலும் இரண்டுதான்!
உயிரும் இரண்டுதான்!
உணர்வுகளும் அதைப் போலவே!

நம் நான்கு கண்களும்
ஒரேக் கனவைக் காணுவதில்லை!
உன் கண்ணில் உன் கனவுகள்..
என் கண்ணில் என் கனவுகள்..

நான்/நீ நினைப்பதை உ/எ ன்னால்
கண்டு பிடிக்கவும் முடியவில்லை!
மௌனத்தின் அர்த்தம் புரிந்து கொள்ள
நாம் ஒன்றும் ஞானிகளுமல்ல!

நம் ரசனைகளும் ஒன்றாகவே இல்லை!
எனக்குப் பிடித்தது எல்லாமே உனக்குப் பிடிக்கவில்லை!
உனக்குப் பிடித்தது எல்லாமே எனக்கும் பிடிக்கவில்லை!

நிறத்தில் மட்டுமல்ல
கருத்திலும் நாம் ஒரே மாதிரியில்லை!

என்னைப் போல நீ இல்லை!
நிஜமாய்,
என்னைப் போல நீ இல்லவே இல்லை!!

ஆனாலும் உன்னை நான் காதலிக்கிறேன்! …காதலிப்பேன்!

என்னை என் குறைகளோடு சேர்த்தே நேசிப்பவள் நீ !
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேனடி….
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேன் நான்!

புனிதமாக
வாழ்த்தி வணங்க
நம் காதல் ஒன்றும்
தெய்வீகமானது அல்ல!

இயல்பாக வாழ்ந்து மகிழ,
அது யதார்த்தமானது…
மிக மிக யதார்த்தமானது!

உன் நகம்

நீ வெட்டும் போதெல்லாம்,
உன்னை விட்டுப் பிரிகிற சோகத்தில்
உன் நகம் அழுகிறதே,
உனக்கது கேட்பதில்லையா?

மகிழ்ச்சியையும், துயரத்தையும்

நம்
மகிழ்ச்சியையும்
துயரத்தையும்
பகிர்ந்து கொள்ளலாம்
என்கிறாய்!
வேண்டாமடி!
என் மகிழ்ச்சியையும்
உன் துயரத்தையும்
பரிமாறிக் கொள்வோம்!

முதல் குழந்தை

நம்
முதல் குழந்தைக்கு
என்னப் பெயர்
சூட்டலாமெனக் கேட்கிறாய்!
அடிப்பாவி!
நமக்கு(ள்) முதலில் பிறந்தது
காதல் குழந்தைதானே?

காதல் நிறம்

நம் குடும்பத்துக்கு இடையே
ஒரு சமாதானக் கொடியாய்ப் பறக்கும் என்று நினைத்திருந்தேனே!
வெள்ளை நிறத்தில் இருந்ததோ என் காதல்?

உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்
ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!
அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?

எப்போதும் உன்னுடைய நினைவுகளை மட்டுமேப்
பசுமையாய் சுமந்து திரிந்ததே!
ஒரு வேளை பச்சை நிறமாய் இருந்ததோ என் காதல்?

உன் காதல் எவ்வளவு பெரியது என்று கேட்டவர்களிடமெல்லாம்
வானைப் போலப் பரந்தது என்பேனே!
நீல நிறமாயிருந்ததோ என் காதல்?

உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?

உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…

ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
என்னைப் போல…

உன்னைச் சந்தித்தால்

உன்னைச் சந்தித்தால் பேசுவதற்கு
லட்சம் வார்த்தைகளைக்
கோர்த்து வைத்திருந்தேன்!
நீ பார்த்த ஒற்றைப் பார்வையில்
ஒவ்வொன்றாய் நழுவி
எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்”
என்னப் பார்வையடி அது?

என்னைக் கொல்ல

அதெப்படி உன்னால் மட்டும்
ஒரே சிரிப்பால்
என்னைக் கொல்லவும் முடிகிறது,
என் காதலை வளர்க்கவும் முடிகிறது?

ஈர விழி

என் ஈர விழிப் பார்வை
உன்னை அசைப்பது கூட இல்லை!
உன் ஓர விழிப் பார்வையோ
என்னை ஆட்டி வைக்கிறது!
அப்படிப் பார்ப்பதற்கு எனக்கும் சொல்லிக்கொடேன்!

இதயத்தின் எடை

உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 60000 கிராம்
அதிகமாக இருக்கும்!

கொலுசு 3

திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.

கொலுசு 2

கொலுசு அணியாத உன் கால்…
கவிதை சூடாத காதல் போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊடல் நேரங்களில்
என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!
கொலுசைக் கண்டு பிடித்தவளு/னுக்குக் கோவில் தான் கட்ட வேண்டும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பள்ளி விடுமுறையில்
எந்த இசைப்பயிற்சிக்கு போகலாம்?
என்று கேட்கும் என் தங்கையிடம்,
உன்னைப்போல கொலுசில்
இசைக்கக் கற்றுக்கொள்
என்று எப்படி சொல்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசு கறுத்துப் போகுமாம்.
உன் கொலுசு பொன்னிறமாகத்தான் மாறும்!
அணிந்திருக்கும் கால் அப்படி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளிக்கும்போது கொலுசைக் கழற்றிவைத்து விட்டுக் குளி!
நீ குளித்த நீர் பட்டு உன்னைவிட அழகாகிவிடப் போகிறது உன் கொலுசு!

கொலுசு

வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசுக்கும், தங்கக்கொலுசுக்கும்,
என்ன வித்தியாசம்? என்றாய்.
உன் கலகல சிரிப்புக்கும், அமைதியானப் புன்னகைக்கும்,
என்ன வித்தியாசம்? என்றேன்!
அமைதியாகப் புன்னகைத்து விட்டுப் போனாய்!
நீ தங்கக் கொலுசுக்கு மாறவிருப்பதை சொல்லாமல் சொல்லி…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பழையக் கொலுசு உனக்கெதற்கு? என்கிறாய்.
நான் கலைப் பொருட்கள் சேகரிப்பது உனக்குத் தெரியாதா?
‘தேவதை அணிந்த கொலுசு’ என்று பத்திரப் படுத்தத்தான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ஜீன்ஸ் அணியும்போது கொலுசைக் கழற்றி வைத்துவிடுவாயோ?
உன் புடவையிடம் புலம்பிக் கொண்டிருக்கிறது உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ நடந்து வரும்போது உன் கொலுசின் இசையைக் கேட்க
என் இதயத்தின் ‘லப் டப்’ ஓசை இடையூறாய் இருக்கிறதாம்…
துடிப்பதை நிறுத்த சொல்லி சண்டையிடுகிறது என் செவி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சத்தம் போட்டபடி உன் காலடியில் துள்ளுகிறது உன் கொலுசு!
சத்தமில்லாமல் என் மனசடியில் கொல்லுகிறது என் காதல்!

உன்னைப்போல!

உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைப் பார்த்ததும்,
தலை குனிந்து, மெல்ல சிரித்து,
ஓடி ஒளிந்து கொள்கிறது என் காதல்!
அதுவும் அழகாய்த்தான் வெட்கப்படுகிறது…
உன்னைப்போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதேச்சையாய்
உன் காதில் என் உதடு படும்போது
உன் கன்னத்தில் பூக்குமே ஒரு வெட்கப்பூ…
அப்போது தானடி புரிகிறது
“எதுவாய் இருந்தாலும் ரகசியமாய் சொல்”
என நீ சொல்வதின் ரகசியம்!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?

கையில் என் காதலோடு.

ஊர்வலம் வரும் சாமியைப் பார்க்கக்
காணிக்கையோடுக் காத்திருப்பதைப் போல,
என் தேவதைக்காகக் காத்திருக்கிறேன்,
கையில் என் காதலோடு.

என் கவிதைகள்!

உனக்கான முதல் கவிதை
எழுதப்படவில்லை...
அது உனக்கே சூட்டப்பட்டது!

***************************************

என் கவிதைகளின் கரு நீ!
உன் கனவுகளின் உரு நான்!

***************************************

நம் கண்களின் சந்திப்பு
காதலை சொல்லும்…
நம் கனவுகளின் சந்திப்பு?

***************************************

நான் எழுதுகையில் உருவத்தையும்
நீ வாசிக்கையில் உயிரையும்
பெறுகின்றன, என் கவிதைகள்!

***************************************

இது என்ன வகை பண்டமாற்றம்?
மனதைக் கொடுத்து விட்டு
மனதையே எடுத்துப் போகிறாய்…

***************************************

எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னேக் கைது செய்யும்
கொடுமைக்காரி நீ!

பார்வை

நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதலில் கட்டிப் போடும் என்னைக்
கண்களாலேயேக் கட்டிப் போடுகிறாய்…
இதுதான் “கண்கட்டி வித்தை” என்பதா??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதல் பார்வையில் நீ அழகு…
மறு பார்வையில் பேரழகு...
யாரிடம் பெற்றாயோ,
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைக் கவிதை என்றேன்!
ஏன் காதல் கவிதையென்று
சொல்லவில்லையெனக்
கோபித்துக்கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாருமற்றத் தனிமையில்
என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
குடும்பத்தோடு இருக்கையில்
என்னைத் தனிமைப் படுத்துகிறது…
உன் நினைவு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு தண்டவாளமாய் நீ!
மறு தண்டவாளமாய் நான்!
நமக்கேத் தெரியாமல்
நம்மீது பயணிக்கிறது
காதல் ரயில்!!

நீ…நான்…தனிமை…

உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!

பழகிய ஒரே வாரத்தில்
என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்!
எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!

என் அம்மாவிடம் கதையளக்கிறாய்…
என் அப்பாவிடம் பேசுகிறாய்…
என்னை மட்டும் பார்க்கிறாய்!

என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ!
உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்!
நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!

முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்…
இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்…
மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்…
என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!

மூன்றாண்டுகளாக…
எதையெல்லாமோ பேசி தீர்த்த நாம்
இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன்
காரணம் அப்போது தெரியவில்லை!

காதலைப் பற்றிய உன் எண்ணங்களை
முழுதாய் அறிந்து கொண்டபோதும்
உன்னை மனைவியாக அடையப் போகிறவன்
கொடுத்து வைத்தவன் என்றே
நினைத்துக் கொண்டது என் மனது!

பின்னொரு நாள்
என் கவிதைகளை வாசித்து விட்டு
என்னைக் கணவனாய் அடையப் போகிறவள்
கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல
மெல்லிய சலனம் எனக்குள்!

அதன்பிறகு
என் மீது நீ அக்கறை கொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து கொண்டிருந்தது
உன் மீது நான் கொண்டிருப்பது
நட்புதான் என்ற என் நம்பிக்கை!

எப்போது, எப்படி, எதனால்
என்கிற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லாமல்
நம் நட்புக்குள்ளே
சத்தமில்லாமல் மெதுவாய்
நுழைந்து கொண்டிருந்தது
என் காதல்!

ஒருநாள் பழைய நண்பனிடம்
உன்னை அறிமுகப் படுத்துகையில்
உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்”
உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”

மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில்
மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்…
என்னிடம் தனியாக கேட்கிறாய்…

“ஒரு கவிதை சொல்லு”

“எதைப் பற்றி?”

“ம்ம்ம்… என்னைப் பற்றி?”

“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”

“ம்ம்ம்… காதல் கவிதை!”

மின்சாரம் வந்தது!
நீ மறைந்து போனாய்…

எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க…
உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க…
காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும்,
அப்போது நாம் காதலித்தது!

அடுத்துவந்த நாட்களில்
வார்த்தைகளைத் தாண்டி
பார்வைகள் பேசிக்கொண்டதை
வார்த்தையில் வடிக்க முடியுமா?

எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!

பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை
பார்வையில் சொல்லிவிட்டுப் போனால்
எப்படிப் புரியும்?

பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்!
பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?

காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!

நம் காதலை நாம் உணர்ந்தபிறகும்
யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி!
நடுவராய் இருக்கிறது நம் காதல்!

பெண்கள் காதலைச் சொல்லும்போது
வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
ஆண்கள் காதலைச் சொல்லும்போது
பயம் வந்து கொல்லுமாம்…

உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!

வென்றாய் நீ!
சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்!
எப்படி? எப்படி?? எப்படி???

“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” **
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது?
காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!

அதே மொட்டை மாடி…
மாலை நேரம்…
நீ…நான்…தனிமை…

“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”

“சொல்லு”

“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”

“கேளு”

“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”

திக்..

திக்..

திக்..

“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”

சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ!
தோற்கவில்லை நான்!

“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”

“என்ன வேணும்?”

“ஒரு முத்தம்”

சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…

“நீ
உதட்டில் கொடுப்பது
மட்டும் தானடி முத்தம்…
மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”

சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க ,
“நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி

“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”

“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…

தனக்கொரு க(வி)தை
இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில்
நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது…
நம் காதல்!

காதல் கவிதையில்…

ஒரு விழி நான்
மறு விழி நீ
சேர்ந்தே கனவு கண்டாலும்
சேரத்தான் முடியவில்லை.
சேர்ந்தே நனைகிறோம்!

--------------------------------------------------------

பிரிந்து விடு என்றாய்.
பிரிய முடியும்.
விட?

--------------------------------------------------------

உனக்கு எழுதி அனுப்பியக் கவிதையெல்லாம்
என்னைப் பார்த்து அழுகிறது.
எழுதியும் உனக்கு அனுப்பாதக் கவிதையோ
என்னைப் பார்த்து சிரிக்கிறது.

--------------------------------------------------------

எப்போதும் என்னைத் தனிமைப் படுத்துகிறாய்.
காதலிக்கும்போது மற்றவரிடமிருந்து
பிரியும்போது என்னிடமிருந்து!

--------------------------------------------------------

காதலியின் சுகம்
காதல் கவிதையில்…
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!

--------------------------------------------------------

அழுதுவழியும் இந்தக் கவிதைகளை
நீ ஒதுக்கிவிடுவாய் என்றெனக்குத் தெரியும்.
அழுகிற போது மட்டும் என் கவிதைகள்
அழகாயிருப்பதில்லை.
நீயும்தான்…!

என் இதயம்!

முன்பு
உன்னையேத் தாங்கியபோது
காற்றைப் போல லேசாக…
பிரிந்த பின்னோ
உன் நினைவைத் தாங்கவே
பூமியைப் போல பாரமாக…
என் இதயம்!

நம் காதல்!

நான் உன்னையும் , நீ என்னையும்,
தேடிக் கொண்டிருப்பதால்,
நம்மை இணைக்க
முடியாமல் தடுமாறுகிறது
நம் காதல்!


நான் - வானம்…
நீ - நிலம்…
என் காதல் - மழை!
குடை விரித்தது யார்?

நா செஞ்ச குத்தமென்ன?

நா செஞ்ச குத்தமென்ன?
கல்மனசு உனக்குன்னு கவிதையில உளிசெஞ்சு,
கண்ணாடி செலயப் போல பக்குவமா நா செதுக்க…
கல்லுக்குள்ள உம்மனசோ பூக்காதப் பூப்போல!
தானாப் பூக்குமுன்னு நாம்பாத்துபாத்து நீரூத்த,
பூக்கும்போதே வாடிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…
நாங்கண்ணொறங்கும் நேரத்துல இமையாலப் போத்திவிட்டு
ஒன்னையுந்தான் தூங்கவச்சேன், ஒன்னாவேக் கனாக்காண!
காணும்போதே கலஞ்சுபோச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

ஒன்னுமில்லாத என்னெஞ்சும் ஒன்னப்பத்தி நெனச்சதால
பூத்துத்தான் குலுங்குச்சே பூக்காடா மணந்துச்சே
பூவாசம் அத்தனையிலும் உன்வாசம் தேடித்தான
அலையா நானும் அலஞ்சுதான் திரியயில
காடெல்லாம் கருகிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

யெ(ன்)உசுருக்கொரு உருவமிருந்தா ஒன்னப்போல இருக்குமின்னு
மங்காத ஒ(ன்) உருவத்த மனசுக்குள்ள மடிச்சுவச்சேன்
நீயே போனபின்ன மனசெதுக்கு? உசுரெதுக்கு?
மூச்சையும் நிறுத்திப் பாத்தா மூச்சுக்குள்ளும் நீயிருக்க,
உசுருந்தான் போகலையே, நா செஞ்ச குத்தமென்ன?

1/6/08

காத்திருப்பின் வலி

காத்திருப்பின் வலி
மரமொன்றின்
கிளையிருந்து உதிர்கிறது

நம்பிரிவின்
முதற்கணத்தில்
நீ
சிந்திப்போன
புன்னகையும்
பார்வைகளும்
ஓர்
ஓவியமாய்
உறைந்துபோனது,

கிழிபடாத
நாட்காட்டியின்
துயரம்போலத்
தொலைகிறது
என் காதல்.

ஆனாலும்
பெண்ணே
நம்
சிலிர்த்துப்போன
நினைவுகளின் கணங்கள் மட்டுமே
போதுமானவை
என் காத்திருப்புக்கு..

காலடிகளைத்தின்கிற காற்று...

நீ என்னிடம் தந்துபோன
சிலமுத்தங்களும்
புன்னகைகளும்
மட்டும் எனக்குப்
போதுமானதென்று
உனக்கு யார் சொன்னது...?

என் ஆயுளைத் தின்கிற
உன்
நினைவுகளின் காலடி
ஓசையற்று நகர்கிறது
தொலைவிற்கு...

உனக்கான கடிதங்கள்
எழுதப்படாமலேயே
எனக்குள் இறந்தன
கவிதைகளும்...

நீளும் தொலைவுகளை
நெருக்கத் திராணியற்று
நெளியும் என் வாழ்வு..

இப்போது
உன் காலடிகளையும்
தொலைவிற்கு
செலுத்துகிறது காற்று

மழையைப்போல
நிரந்தரமற்றிருக்கும்
நமது பிரிவு
அதைப்போலவே
அழுத்தமானதும்
கவனிக்கச்செய்வதும் கூட

மலர்களின் மெளனமும் நீயும்.....

மலர்களின்

மெளனம் உன்னைப்போல்

அழகானது

ஆனால்

உனது மெளனங்களோ

முட்களைப்போல……..

தேவதைகளின் தேவதைக்கு

அன்பே
உன் நினைவுகளில்
நொருங்கும் என்னிதயத்தை
நீயே வைத்துக்ககொள்…..

என்
தேவதையே
பாசாங்குகள்
எதுவுமற்ற
மெல்லிய மலர்
என் இதயம்
நீ

நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…
சர்வநிச்சயமாய்
வாழ்வின் நீளத்துக்கும்
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…

என்
புன்னகையின்
ஒரத்தில் இருக்கின்ற
அன்பின் பெரும்வலியை
எப்படிச்சொல்லுவது…..

தேவதைகள்
யாரும் புகமுடியா என்னிதயம்
தேவதைகளின் தேவதையே
உன்னால் தான்
நொருங்கிற்று
கொஞ்சம் இரங்கிவா
என் இதயத்துள் இறங்கு

இக்கணத்தில்

என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்
ஒரு துளி
கண்ணீர்கூட
உதிர்க்கலாம்

என்
கல்லறையின் வாசகம்
உன்னுடைதாயிருக்கலாம்
அதை
ப+க்களால் நீ
நிறைக்கலாம்

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா?

என்னுள் இருக்கும் நீ

என் கவிதைகளில்
பேசமுடியாத
வேதனை
உன்னிடமேயிருந்திருக்கிறது

சில பொழுதுகளில்
வாளின் கூர்முனைகளை
வென்று
வலிக்கிறது
உன் மௌனம்...

ஒரு மின்விசிறியின்
முதுகைப்போல்
நீ
உதிரவிடும்
வார்த்தைகளில்
பின்னப்பட்டிருக்கும்
வெறுமை
என்
கனவுகளை சிறையெடுக்கும்.

எனக்காய்
நீ
உதிரவிடும்
புன்னகையின் போதாயிருக்கலாம்
சிறைமீட்பு

மழை.....

ஒருநீண்ட தார்ச்சாலையில்
சோவெனத்துரத்தும்
மழையென விரட்டுகிறது
உன்பிரிவு.

ஒரு
கொடுமிருகத்தைப்போல்.

எதிரே விரியும்
பெருவெளியின் நீளத்தை
என் கால்கள்
விழுங்க விழுங்க.

மறுபடியும்
முடிவற்று விரிகிறதுவெளி
உனை அழைக்கும்குரல்
தொண்டைக்குள் தேங்க
எனை விழுங்கிப்போகிறது மழை.

புன்னகை விற்பவள்

நதி
அதன் புன்னகையை
ஒழிக்கிறது
கடல்மடியில்

அவள்
அனாசயமாய்
அதை எடுத்துச்சூடுகிறாள்
தன் கழுத்தில்

நிலவு
வானில் வரையும்
அவள்
கைகளிற்குச் சிக்காத
ஒளியின் புன்னகையை

அவள் என் புன்னகையை
விற்றுக் கொண்டிருக்கிறாள்...

தான்
நட்சத்திரங்களை
உதிர்ப்பதறியாது

ஒரு
பூவின் புன்னகை
செத்துக் கொண்டிருக்கிறது
அவள் கூந்தலில்

பூக்கள்

பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.

என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.

ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டு வருகிறேன்
புறந்தள்ளிப்போகிறாய்....

அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.

ஒரு
பட்டாம்பூச்சியைப்போல்
சட்டென்று ஒட்டிப்
பறந்து போகிறது
உன்
புன்னகை.

ஆண்,பெண்.....

ஆண்:
எத்தனை ஆசைகள் உன்னிடம்-அதை
ஒவ்வொன்றாய் சொல்லிடு நீ என்னிடம்
வெட்கத்தை இங்கேயும் அகற்றி-உயிரே
உன் உள்ளத்து தவிப்பை நீயும் இறக்கிடேன்

பெண்:
தனிமையில் இருக்கணும் உன்னோடு-அன்பே
தடையின்றி பேசணும் உன் கண்ணோடு
வரிகளால் செதுக்கிய ஓர் கவியோடு
உன் அழகினைப் பாடணும் என் குரலோடு

ஆண்:
கனவுகள் காணணும் உன் விழிதனில்-என்
நினைவுகள் சேரணும் அதன் ஒளிதனில்
பார்வைகள் ரெண்டும் மோதியே-இங்கு
பாறைகள் கூட கரையணும்

பெண்:
இரவு நேர நிலவிருளில்-கண்ணா
உன் விழிக்கதிர்தனில் காய்ந்திடணும்
உறவுகள் பல முன்னே நாம் நின்றே-என்றும்
உரிமையோடு பேசிடணும்

ஆண்:
சின்ன சின்ன ஊடல் கொண்டே-அதில்
செல்ல மனதின் ஏக்கம் கண்டே
உன்னை நானும் நெருங்கிடணும்-மறுகணம்
உயிரும் அன்பும் கலந்திடணும்

பெண்:
உன் குடும்பம் என் குடும்பமதில் இணைந்திடணும்
ஓர் கூடாக நாமும் சேர்ந்து சிரித்திடணும்
புதிய உறவுகள் பிறந்திடணும்-இங்கே
இனிமை பல வந்து சேர்ந்திடணும்

ஆண்:
இறந்த பின்பு என்ன வேண்டும்-உயிரே
இருக்கும் போதே சொர்க்கம் வேண்டும்-உன்னோடு
வாழ்ந்தே உயிரும் தேயவேண்டும்-உறவு
வாழ்வினெல்லைத் தாண்ட வேண்டும்

பெண்:
நரைதொட்டு வாழ்வின் கரைதொட்டும்- நான்
உன்னோடே சேர்ந்து வாழவேண்டும்
உலகை கைகோர்த்தே சுத்தவேண்டும்-அழகே
உயிர்த்துளி ஒவ்வொன்றையும் ரசிக்கவேண்டும்...

குடையில்லா மழை

உன் கண்ணீர்த்துளிகளை உன் இமையே விழாது தடுக்கும் போது
எப்போதும் உனைத்தாங்க விரும்பும் நான் அவற்றைச் சிந்த விடுவேனா?

பதில் தெரியாக் கேள்விகளும்
பகலில் கண்ட கனவுகளும்
சொல்லாமுடியா ஏக்கங்களும்
சூழ்ந்தே இருக்கும் கவிதையுமாய்
கண் தெரிந்த குருடன் நான்
கால் கடுக்கக் காத்திருந்தேன்
-காலத்தின் வேகத்தை மறந்தே

பேருந்தில்,
நெரிசலின் நடுவில்...
நீயும், நானும்...
ஒருவர் எதிரில் ஒருவராக...
ஒன்றாக...
சுவாசம் இரண்டும் ஒன்றையொன்று மோதிட...
தூண்டில் விழிகள் சண்டை போட்டு இழுக்க...
இடையிடையே சில வார்த்தைகள்...
பலதடவை இதழ்கள் மலர...
பேருந்து முழுவதும் ஏதேதோ சலசலப்பு
நாம் இருவரும் அமைதியில் தவழ...
ஆனாலும் பேசினோம்
பார்வையால்...
மௌனத்தால்...
தீண்டலால்...


வந்து விட்டாய் நீ வந்து விட்டாய்
என் வாழ்வில் ஏதோ செய்துவிட்டய்
என்ன செய்தாய் அட என்ன செய்தாய்
என்னையேன் இப்படி மாற்றிவிட்டாய்

குழந்தையின் குறும்பு இத்தனை அழகா
குடையில்லா மழையில் இத்தனை சுகமா
இசையுடன் பயணம் எத்தனை இனிமை
இருட்டினில் மட்டும் ஏன் இந்த தனிமை

கனவினில் உந்தன் முகம் கலையதா ஓவியம் போல்
தினசரி வந்து என்னை தித்திக்க வைப்பது ஏன்
எங்கோ தொலைந்த என் பார்வை
உன் கண்களைக் கண்டதும் மோதியதேன்

கனவுகளும் நினைவுகளும் கண்ணெதிரே தோன்றுதே
இனிக்காத்திருக்காத்திருக்க தேவயில்லை கண்கள் உனைக்கண்டதே
எதிரினிலே, என்னருகினிலே நீயிருந்தாய் போதுமே
இனி வேறெதுவும் தேவையில்லை எனக்கிது போதுமே


உன் வருகை சொன்னதும்
நான் என்னவானேன் அக்கணத்தில் ஏதோ ஆனேன்...
என் மனசு யாவும் மழை தான் பொழிந்து
அணுக்கள் முழுதும் பசுமை ஆகின!
அந்தப் பொன்மாலைப் பொழுதில்
உனைக் கண்கள் தேடின!
காணவில்லையென்றதும்
துடிக்கத்தொடங்கின
-மறுபடியும்
வானம் வெளிக்குமே!
மனசு பதைக்குமே!
இன்றாவது உனைக் காண்பேன் என்று!!!