Welcome

1/3/08

காதல்

உலகின்
எந்த மூலைக்குப் போனாலும்
உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்...
நீ மட்டும்
நிலவைப் போல பிறந்ததற்குப் பதிலாக...
நிலவாகவேப் பிறந்திருந்தால்!

வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா

மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!

மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை

உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!


நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


உன்னைப் பிரிந்த நாட்களில்
எனக்குத் துணையாயிருக்கிறது
தனிமை!

உள்ளமே உன்பின்னால் போனபின்
உலகமே என் பின்னாலிருந்து
என்ன பயன்

என்ன எழுதினாலும், உன்னுடைய
“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”
...க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!


ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்..

உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்

உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!


நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்

என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!


உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே

பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!


பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!

No comments: