Welcome

1/3/08

நம் பிரிவு!

உன் அழகை அழிக்கிறது…
எனக்கு அழுகையை அளிக்கிறது…
நம் பிரிவு!


உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…
உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச
களைத்துப் போகிறது மனமும்!


என் வருத்தங்களை எல்லாம்
உன்னிடம் சொல்ல
வாய் வந்தால் மனம் தடுக்கிறது..
மனம் வந்தால் சொல் மறுக்கிறது!

எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…
கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்
அழ ஆரம்பித்து விடுகிறாய்.

காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.
வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!

என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்
கண்ணீராய் வழிகிறாய்

அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே…
என்னைப் போல காதலியைப் பிரிந்துவருந்துகிறதா?
இந்த மாலைப் பொழுது.

நீ வருவாயென
நான் தேக்கி தேக்கி வைத்தாலும்,
என்னுயிரை கரைத்துக் கொண்டே இருக்கிறது...
இந்த மாலைப் பொழுது!

என் கண்கள் – மலர்கள்.
உன் கண்கள் – வண்டுகள்.
தேக்கி வைத்த தேனெல்லாம்
கண்ணீராய் வீணாகிறது!

கண்ணீரும் ஒரு நாள் வற்றிப் போய்
செந்நீர் உதிர்க்கப் போகிறது
என் கண்கள்!

ஓராண்டாய் ஏற்றி வைத்த உடம்பும்
உன்னைப் பிரிந்த ஒரு நாளில்
இளைத்துப் போனது!

கனவிலும் முத்தங்களைக்
கொடுத்து என்னைக்
கடனாளியாக்குகிறாய்!

நேரில் தான் உன்னோடு பேசமுடிவதில்லை.
கனவில் உன்னைக் கண்டாலாவது
உயிரோடிருப்பதைச் சொல்லலாம் என்றால்
உறங்காமல் அடம்பிடிக்கிறதே
இந்தக் கண்கள்!

கனவில் மட்டும்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
உன்னையங்கு காண்பதால்!

இனிமையானக் கனவெல்லாம்
நனவாகி விட்டு…
கொடுமையான நனவெல்லாம்
அதில் வரும்
கனவாகி விட்டாலென்ன?


மெல்ல உன் விரல் பிடித்து
செல்லமாய் சில சொடுக்கெடுத்து
மெதுவாய்க் கூந்தல் கோதி
நெற்றியில் முத்தமிட நெருங்குகையில்
கலைகிறது…கனவு!

நனவில் வராமல் கொல்கிறாய்.
கனவில் வந்து கொல்கிறாய்.

நான் தூங்கும்போது
கனவில் நெருங்கி வந்து
தோள் சாய்ந்தவள்
விழித்துப் பார்த்தால் காணவில்லை…
வழியெங்கும் தேடினால்…
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
என் இதயமெத்தையில்!

கனவு மட்டும் இல்லையென்றால்
உன்னைக் காண்பது
கனவாகவேப் போயிருக்கும்!

நாம் பிரிந்துவிட்டோமென்று
சொல்கிறவர்க்கெல்லாம்
கனவு காணும் பழக்கமில்லையோ?

என்னையும் உன்னையும்
காலம் வந்து பிரித்தது.
எனக்குள் இருக்கும் உன்னை
யார் வந்து பிரிப்பார்?

என் உயிரை
நழுவாமல் இறுக்கிப் பிடித்திருக்கிறது
உன் நினைவுக் கயிறு.

உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!

உன்னைப் பார்க்கும் ஆசையெல்லாம்
இந்த நிலவைப் பார்த்துத்
தீர்த்துக் கொள்கிறேன்
பௌர்ணமியன்று மட்டும்!

கடலலைகளைக் கூட எண்ணிவிடலாம்.
உன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்
என் நினைவலைகளை?

உன்னிடம் பகிர்ந்தால்
எல்லாத் துயரங்களும் பாதியானது.
பிரிவுத் துயரம் மட்டும் இரட்டிப்பாகிறது.

உன் பிரிவு தரும் துக்கமும்
உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
உன் முத்தங்களைப் போல!

நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன்?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம்?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்.

இடுப்பில் இருந்து
இறக்கிவிடமுடியாதக் குழந்தையைப் போல
உன்னையேத் தொற்றிக்கொண்டிருக்கிறது
என் மனம்.

விடைபெறும் கடைசி தருணம்
என்விரல் விட்டு உன் விரல் பிரியும்
இறுதி நொடியில்
பௌர்ணமி அமாவாசையானது போல
அழிந்துபோனது என் அழகெல்லாம்!

நீ நலம் என்றால்
நானும் நலம்.
நீ நலமில்லையென்றால்
நானே இல்லை!

உன்னை எனக்குக் காட்டியதால்
கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு…
நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன!

காதலில்
கண் பேசியதெல்லாம்
மனதுக்குப் புரிந்தது.
பிரிவில்
மனம் சொல்வதெதுவும்
அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை.

உன் தரிசனத்துக்காக
என்னை உன்பின்னே அலையவிட்டவை,
இன்று உன்னைப் பார்க்க முடியாமல்
ஒளிந்து கொள்ள வைக்கின்றன!
புரிந்துகொள்ளவே முடியவில்லை
என் கண்களையும்,
பிரிந்து போன உன்னையும்!

என்னை விட்டுப் போவதென முடிவெடுத்தபின்
என் காதலைப் போல
என் கண்களையும் கொன்று விட்டுப் போ!
அல்லது
வற்றாத கண்ணீரைத் தந்து விட்டுப் போ!

என் காதல் கடலை விடப் பெரியது.
உன் பிரிவால் வழியும் கண்ணீர்க்கடலோ
என் காதலைவிடப் பெரியது.


உன்னைக்
காதலில் நனைத்தேன்.
நீயோ பிரிந்துவிட்டு
என் கண்களை நனைக்கிறாய்

உன் பிரிவால்
அழுதழுது என் கண்ணீர்
வற்றிப் போனாலும்,
சுரந்துகொண்டே இருக்கிறது…
உன் மீதானக் காதல்!

நீ காதலை வைத்தது
உள்ளத்திலோ உதட்டிலோ தெரியவில்லை.
ஆனால் விலகும்போது
கடலை வைத்துவிட்டுப் போகிறாய்
என் கண்ணில்!


பாவம் என் கண்கள்.
நீ தூங்கவே விடுவதில்லை…
காதலித்த போதும், பிரிந்தபிறகும்!

உன்னிடம்
என் காதலைக் காட்டிக் கொடுத்ததும்,
உன் பிரிவை ஊருக்கெல்லாம்
அழுதேக் காட்டிக் கொடுக்கப் போவதும்,
என் கண்கள்தாம்!

No comments: