நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.
நள்ளிரவிலும் விழித்தெழிந்து
கண் கசக்கினால்
நீ தான் தெரிகிறாய்.
காதலும் தும்மலும்
ஒன்றுதான் என்றேன்.
ஒரு முறை தும்மிவிட்டு
விலகி விட்டாய்.
இலை மறை காயாக இருந்துவிட்டு
இப்போது பறவை கொத்தும் கனியாகிவிட்டது
நம் காதல்!
அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.
நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!
‘முத்தமிடுகையில்
இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
கண்களை மூடிக் கொள்கிறாய்’
என்று சொன்னதுதான் தாமதம்…
கண்களையும் அகலத் திறந்து
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தையே மூடிக் கொண்டாய்!
என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென தனியாக எப்படி
சொல்ல?”
கழுத்தைப் பிடித்து
சண்டையிட வந்தவன்
உன்னைப் பார்த்ததும்
கட்டிப்பிடிக்கிறேன்…
உன் வெட்கத்தை!
நீ விலகியதால்
காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.
காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!
உன்னை எதிர்பார்த்து,
என்னுள் காற்றிருக்கும் வரை
காத்திருக்கும்
இந்த மனம்!
என் கவிதைகள்
எதனையும் வாசிக்காமல்
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கிறது
என் காதல்!
தங்களை விட்டுவிட்டு
உன்னோடு போய்விட்டதாம்…
மனதிடம் சண்டையிடுகின்றன
கண்கள்!
‘உன்’ , ‘என்’ என்பன போய்
‘நம்’ ஆனதால்…
நம்மையே
நினைத்திருக்கிறது நம் மனம்!
உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபங்களும்
உன் புன்னகையைப் பார்த்ததும்
மன்னிப்போடு மண்டியிடுகின்றன!
“பிரிந்து விட்டாள்”, “பிரிந்து விட்டாள்” என்று புலம்பிக் கொண்டே
உன் பின்னேப் போய்க் கொண்டிருக்கிறதே இந்த இதயம்…
இனியெப்படி நான் வாழ்வது?
உன்னைத் தொலைத்து விட்டு,
இப்போது உன்னைத் தேடியே
நானும் தொலைந்து போகிறேன்.
என் எடையும்
உன் எடைக்கு சமமாகி விட்டது!
மனதில் உன்னை சுமக்கும் போதும்…
1/3/08
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment