Welcome

1/3/08

உன் பிரிவு?

என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.

நீ பிரிவுக்கு அஞ்சாமல்,
உலகுக்கு அஞ்சிப் பிரிந்துவிட்டாய்.
நானோ துயருக்குத் தோழமையாகிறேன்.
காதலுக்கு துரோகியாகிறேன்.

ரசித்து ரசித்து காதலிப்பது எப்படியென
தெரிந்த மனதுக்கு
பிரியாமல் உன்னைக் காப்பது எப்படியென
தெரியாமல் போனது!

உடலில் குறையும் எடையைத்தான்
உள்ளத்தில் சுமையாகக் கூட்டுகிறதா
உன் பிரிவு?

தொட்டபோதெல்லாம் சில்லென இருந்துவிட்டு
விலகியபின்தான் எரிக்குதடி காதல் தீ!

உன்னை ஒருமுறைச் சந்தித்ததற்கே
நிலவைத் தொட்டவனைப் போல
ஊருக்குள் எனக்குப் பெருமை!

பசும்பால் தருகிறாய். தேனும் தருகிறாய்.
“இரண்டும் கலந்து தா” என்றால்…
முத்தமிட்டு விட்டு ஓடுகிறாய்!

என்னுயிரின் உருவம் நீ!
உன்னுயிரின் உருவம் நான்!
நம் காதலின் உருவம்?
வேறென்ன குழந்தைதான்!

உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை…
எனக்குதான் உன்னை மறக்கவேத் தெரியாதே!

உன்னைப் பிரிந்துவிட்டேனா?
வசிப்பதுதானடி இங்கே…
வாழ்வதெல்லாம் உன்னுள்ளே!

மூங்கில் தோள்; மாந்தளிர் மேனி;
முத்துப் பல்; நறுமணம் வியர்வை ;கூர்வேல் கண்.
- இலக்கணப்படி உவமை.
காதல்படி உண்மை.

பூங்காப் பக்கம் செல்லாதே.
உன் கண்போல் பூக்கவில்லையேயென
பூக்களெல்லாம் கண்ணீர் விடுகின்றன.

உன் கூந்தலேறிய மகிழ்ச்சியில்
மலர் சிரிக்கிறது.
அதன் எடைதாங்காமல்
உன் மெல்லிடையோ அழுகிறது.

நட்சத்திரமெல்லாம் மின்னுகிறதா?
அடிப்போடி…
நிலவெது? உன் முகமெது? எனத் தெரியாமல்
மலங்க மலங்க விழிக்கிறது!

உன் முகம்போல் ஒளியில்லாததால்
என்னிடமிருந்து தப்பித்தது…
நிலவு!

உன் போல ஒளிவீச
நிலவுக்கும் ஆசையாம்.
என்ன ரகசியமென சொல்லிக்கொடு.

அழகு.இசை.சுவை.மணம்.ஸ்பரிசம்.
இப்படி நீ தரும் ஐம்புல
இன்பங்களுக்கும்
மேலாகத் தர என்னிடம் இருக்கிறது
காதல்!


விலகினால் சுடும்,
நெருங்கினால் குளிரும் ஒரு தீ…
இவள் ஒருத்தி தான்!

ஒரு தேவதையென்னைக் காதலிப்பாளென
சிறுவயதில் நானும் நினைத்ததுண்டு!
இன்றோ என் தோள்சாய்ந்தபடி
என்னோடு நடக்கிறாய் என் காதலியாக…
இதுதான் நினைத்தது ‘நடப்பது’என்பதா?

அணைத்துச் சேரும்போது,
“பகுத்துண்ணும் இன்பம் இதுவா?” என்றேன்.
இல்லையெனச் சொல்லி,
அணைத்துச் சேர்த்தாய் நம் உதடுகளை!

இறுக்கி அணைக்கிறாய்.
மூச்சு வாங்குகிறது…
இடையில் அகப்பட்ட காற்று!

நமக்குள்ளான சண்டையில்
யார் முதலில் விட்டுக் கொடுப்பதென
ஆரம்பிக்கிறது அடுத்த சண்டை…


அணைத்துப் படித்தால்
எல்லாப் பக்கமும்
காதல் வழிகிற
கவிதைப் புத்தகம் நீ!

No comments: