Welcome

1/3/08

பேரழகு.

என் காதல் கடலென்றிருந்தேன்…
அரைக்கண்ணில் பார்க்கும்
உன் கள்ளப் பார்வையில்
என் முழுக்காதலும் ஒரு துளியானது!

உன் பார்வையில்
மழையாய்ப் பொழிகிறதென் ஆண்மை!
என் பார்வையில்அருவியாய்
வழிகிறது உன் வெட்கம்!
மழையிலும் அருவியிலும்
நனைகிறது நம் காதல்!

அரைக்கண்ணில் பார்த்தே
முழு உயிரையும் குடிக்கிறாய்.
இன்னும் நேராய்ப் பார்த்தால்?

நீ சிரிப்பது அழகு.
என்னைப் பார்த்து சிரிப்பது பேரழகு.
நான் பார்க்கும்போது சிரிப்பதின் அழகை
வருணிக்க ஒரு வார்த்தைக் கொடு.

எல்லா பாகங்களும் அழகாக வெட்கப்படும்போது
உன் பார்வை மட்டும் என் உயிரைக் குடிக்கிறதே
உனக்குள் ஏனிந்த முரண்பாடு?

நீ பார்க்கும்போது
எமனாய் மாறி என்னைக் கொல்கிறது!
நான் பார்க்கும்போது
மானாய் மாறி அங்குமிங்கும் ஓடுகிறது!
நாம் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத தருணங்களில் மட்டுமே
உன் கண்கள், கண்களாய் இருக்குமோ?

புருவங்களே!
கொஞ்சம் இவள் கண்களை மறையுங்களேன்..
பார்த்தேக் கொல்கிறாளே!

உன் துப்பட்டாவிற்குத் தெரியுமா?
அது கோயில்யானையின் முகபடாமை
விட பெருமை வாய்ந்ததென்று?

உன் இருவிழிகளின் ஒளி தாங்காமல் தான்
நீ நிலம் நோக்கும் போதுமட்டும் உன்னைப் பார்க்கிறேன்!
ஆனால் உன் ஒற்றை நெற்றிப் பார்த்தே
என் இதயம் நொறுங்குகிறது!

மற்ற பெண்களெல்லாம் கண்மை தீட்டினால்
நீ “இளமை” தீட்டி வருகிறாய் கண்ணுக்கு.
முகத்துக்கு மஞ்சள் பூசியும் அலுத்துவிட்டதா?
இப்படி வெட்கத்தைப் பூசிக் கொண்டு வருகிறாய்.
இதற்குமேலும் வேறென்ன வேண்டும் உன் முகத்துக்கு?

கள்ளைப் பருகினால்தான்
போதை தலைக்கேறுமாம்.
கள்ளி! உன்னைப் பார்த்தாலே
போதை மனதுக்கேறுகிறதே!

உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை

No comments: